நாளை வைகாசி மாதம் பிறக்கிறது! பெருமாளுக்கு மிகவும் உகந்த விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டை நாளை கடைபிடிக்கலாம். ஜோதிட ரீதியாக, சூரியன் ஸ்திர ராசிகளில் நுழையும் இந்த புண்ணிய காலம், மங்களகரமானதாக கருதப்படுகிறது. வேத ஜோதிடத்தின்படி, சூரியன் ஒரு புதிய ராசிக்குள் நுழையும் தருணம் மிகவும் புனிதமானது.
இந்த சிறப்பு வாய்ந்த விஷ்ணுபதி புண்ணிய காலம், நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த காலத்துடன் தொடர்புடையது. பக்தன் பிரகலாதனை காத்த பெருமாள், இரணியனை வதம் செய்தபின் கோபம் தணியாமல் இருந்தார். அப்போது, மகாலட்சுமி தேவி பெருமாளை சாந்தப்படுத்த, லட்சுமி நரசிம்மராக மாறினார். அந்த புனிதமான நேரமே விஷ்ணுபதி புண்ணிய காலமாக கருதப்படுகிறது. மேலும், மகாவிஷ்ணு வாமனராக வந்து மூன்றடி நிலம் கேட்டபோது, மகாபலி சக்கரவர்த்தி தன் சிரத்தை தானம் செய்த புனித தருணத்திலும் இந்த பேரருள் பூமிக்கு கிடைத்ததாக நம்பப்படுகிறது.
விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது வெறும் 3 மணி நேரம் 36 நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் ஒரு சக்திவாய்ந்த நேரமாகும். சூரியன் ராசி மாறும் நேரத்திற்கு முன்னும் பின்னும் தலா 1 மணி 48 நிமிடங்கள் என மொத்தம் 9 நாழிகைகள் இந்த புண்ணிய காலம் அமைகிறது. இந்த குறுகிய நேரத்தில் செய்யப்படும் தியானம், ஜபம் மற்றும் வழிபாடுகள் ஆயிரம் மடங்கு பலனைத் தரும். உங்கள் நியாயமான வேண்டுதல்கள் அடுத்த 3 விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.
இந்த புனித நாளில், அதிகாலை எழுந்து நீராடி, பூஜை அறையில் விளக்கேற்றி மகாவிஷ்ணுவையும் மகாலட்சுமியையும் மனதார வழிபட வேண்டும். பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமரத்தை சுற்றி வந்து, 27 பூக்களை வைத்து 27 முறை பிரகார வலம் வரலாம். ஒவ்வொரு சுற்றிலும் ஒரு பூவை கொடிமரத்தின் முன் வைத்து வழிபடலாம். துளசி பூஜை, கோ பூஜை செய்வது சிறப்பு. கோவிலில் மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது, தாயாருக்கும் பெருமாளுக்கும் உகந்த துளசி, மல்லிகை பூ வாங்கி செல்வது செல்வத்தை பெருக்கும், கடன் தொல்லைகளை நீக்கும். 7 தலைமுறை பித்ரு தோஷங்களையும் இது நீக்கும். மேலும், புதிய முயற்சிகளில் வெற்றி பெறவும், வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றம் காணவும், “ஓம் நமோ நாராயணாய” அல்லது உங்கள் ராசிக்குரிய விஷ்ணு மந்திரத்தை 108 முறை ஜபிக்கலாம். திருமண வரம் வேண்டுவோருக்கு விரைவில் திருமணம் கைகூடும். வீடுகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அதிக பலன் தரும். இந்த புண்ணிய காலத்தில் செய்யப்படும் தான தர்மங்கள், அன்னதானம், ஆடை தானம், மஞ்சள் சரடு, வளையல் போன்ற மங்களப் பொருட்கள் தானம், நீர், பானகம், பால் தானம் போன்றவை மிக சிறந்த பலன்களை அளிக்கும்.