அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய சூழலில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரின் கட்சிப் பதவிகளை பறித்து, எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலோசனை கூட்டத்தில், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில், இரு தரப்பினரும் தனித்தனியாக சபாநாயகரை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளரை நேரில் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நகர்வு, அதிமுகவின் எதிர்கால அரசியல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.