சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். இந்த கருத்துக்கள் பெரும் எதிர்ப்பை கிளப்பியதோடு, அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதியன்று பொன்முடி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பாஜக மாமன்ற உறுப்பினரான உமா ஆனந்தன் என்பவர், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொன்முடிக்கு எதிராக தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.
மத ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டுதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பொன்முடியைத் தண்டிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு, பின்னர் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக, தனக்கு எதிராகப் பதியப்பட்ட இந்த தனிநபர் புகாரை ரத்து செய்யக் கோரி, பொன்முடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் ஜூலை 2 அன்று வழங்கினார். வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம், உமா ஆனந்தன் தாக்கல் செய்த தனிநபர் புகாரில் நீதிமன்றம் தலையிட மறுத்து, பொன்முடியின் கோரிக்கையை நிராகரித்தது.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்குமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் பொன்முடி நேரில் ஆஜராகாததால், நீதிபதி சவுந்திர பாண்டியன் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார். வரும் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பொன்முடியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
