தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, 2026-2027 சந்தைப்படுத்தல் பருவத்திற்கான 14 முக்கிய காரிஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSP) மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.72 உயர்த்தப்பட்டு ரூ.2441 ஆகவும், முதல்தர நெல்லுக்கு ரூ.2461 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யகாந்தி விதைக்கு குவிண்டாலுக்கு ரூ.662 உயர்த்தப்பட்டு ரூ.6760 ஆகவும், பருத்திக்கு ரூ.557 உயர்த்தப்பட்டு ரூ.7737 ஆகவும், எள் விதைக்கு குவிண்டாலுக்கு ரூ.500 உயர்த்தப்பட்டு ரூ.9060 ஆகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பருத்தி வகைகளில், நடுத்தர இழைப்பருத்தி குவிண்டாலுக்கு ரூ.8267 ஆகவும், நீண்ட இழைப்பருத்தி ரூ.8667 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் வித்துக்களில், மஞ்சள் சோயாபீன் குவிண்டாலுக்கு ரூ.5708 ஆகவும், நிலக்கடலை ரூ.7517 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு வகைகளில், துவரம் பருப்பு குவிண்டாலுக்கு ரூ.8450 ஆகவும், உளுந்து ரூ.8200 ஆகவும், பாசிப்பருப்பு ரூ.8780 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் மற்றும் பிற பயிர்களுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சோளம் குவிண்டாலுக்கு ரூ.4023 ஆகவும், மால்டண்டி ரகம் ரூ.4073 ஆகவும், கேழ்வரகு ரூ.5205 ஆகவும், மக்காச்சோளம் ரூ.2410 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.2900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.