மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. காங்போக்பி மாவட்டத்தில் 3 தேவாலய தலைவர்கள் ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முக்கிய வாழ்வாதாரப் பாதையான தேசிய நெடுஞ்சாலை – 2 முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் விவரங்கள் தெரிவிக்கையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த தேவாலய தலைவர்கள் சிலர், இன்று காலை அருகிலுள்ள சுராசந்த்பூரில் நடைபெற்ற மதக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு காங்போக்பிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த ஒரு ஆயுதக் குழுவினர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 3 தேவாலய தலைவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர்.
காவல்துறையின் தகவல்களின்படி, நாகா பழங்குடியின ஆயுதக் குழுக்களுக்கும், குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே நிலவும் இனக்கலவரத்தின் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கோட்சிம் மற்றும் கோட்லென் கிராமங்களுக்கு இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொல்லப்பட்ட தேவாலய தலைவர்கள் ரெவரெண்ட் வி. சிட்ல்ஹௌ, ரெவரெண்ட் கைகுலன் மற்றும் பாஸ்டர் பாவோகுலன் ஆகியோர் ஆவர். இவர்கள் சமூகங்களுக்கிடையே சமாதானத்தை வலியுறுத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொடூரமான சம்பவத்தைக் கண்டித்து, குக்கி மாணவர் அமைப்பு மற்றும் தாதோ அமைப்புகள், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் காலவரையற்ற அவசர முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், தேசிய நெடுஞ்சாலை – 2 முடக்கப்பட்டுள்ளது. இந்த அசம்பாவிதம் குறித்து மேலும் பதற்றம் ஏற்படாமல் தடுக்க, இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
