தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மான விவாதம் இன்று தொடங்கியது. இந்த விவாதத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராஜேஷ்குமார், பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். எந்தக் கட்சியும் ஆதரவு தெரிவிப்பதற்கு முன்பே, அவசர அவசரமாக பாஜக ஆதரவு தெரிவித்ததாகவும், பதவி ஆசைக்காக இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மறைமுகமாக ஆட்சியை கைப்பற்றவும், கவர்னர் ஆட்சியை கொண்டுவரவும் பாஜக முயற்சிப்பதாக அவர் கூறிய கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை.
தங்களது சுயநலத்திற்காக பல முடிவுகளை எடுத்துவிட்டு, அதற்கு உள்நோக்கத்துடன் இல்லாத ஒன்றை கூறி, பாஜக மீது குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், காங்கிரஸ் கட்சியினர் பாஜகவை கண்டு எவ்வளவு பயந்துள்ளனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மதச்சார்பற்றவர்கள் என்று தங்களை தாங்களே கூறிக்கொள்ளும் இவர்கள், மதச்சார்புள்ள நடவடிக்கைகளை ஆதரிப்பது மக்களுக்குத் தெரியும்.
சட்டமன்றத்தில் ஒற்றுமையை வலியுறுத்தாமல், வேற்றுமையையும் வேறுபாட்டையும் விதைக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பேசியுள்ளார். மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்தார்களே தவிர, அரசியலில் தவறுகள் செய்தவர்களுக்கு புகலிடம் கொடுக்க அல்ல. வருங்காலத்தில் தமிழக மக்கள் இதை உணர்த்துவார்கள் என்றும் தமிழிசை தெரிவித்தார்.
ராஜேஷ்குமார் மட்டுமின்றி, அவரைத் தொடர்ந்து பேசிய மற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசியது கண்டிக்கத்தக்கது. சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பதிலாக, தவறான குற்றச்சாட்டுகளும், தனிநபர் தாக்குதல்களும் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.
