கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், பேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கேசகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு (41). இவர் சிக்கமகளூருவில் சொந்தமாக பேக்கரி நடத்தி வந்தார். இவருக்கும், இவரது மனைவி ககனாவிற்கும் (38) கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 மற்றும் 6 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.தொழில் நிமித்தமாக ரகு தனது குடும்பத்துடன் சிக்கமகளூருவில் வசித்து வந்தார். சமீப காலமாக, தனது மனைவி ககனாவின் நடத்தையில் ரகுவுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு, குடும்பத் தகராறு முற்றியுள்ளது.
சம்பவத்தன்று, தனது மனைவியுடன் காரில் கேசகோடு கிராமத்திற்கு புறப்பட்ட ரகு, வழியிலேயே மனைவியுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், காரிலேயே மனைவியை ரகு கொலை செய்துள்ளார். இந்தக் கொலையை அவர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர், மாலை சுமார் 6.30 மணியளவில் கேசகோடு கிராமத்திற்கு வந்த ரகு, தனது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, தான் மனைவியை கொன்றுவிட்டதாகவும், கொலை செய்த வீடியோவையும் அவர்களுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரகுவை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில், கேசகோடு கிராமத்தின் எல்லையில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் ரகு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, ரகுவின் உறவினர்கள் அவரை கிராமத்தில் தேடினர். அப்போது, அவர் கிராம எல்லையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அரேஹள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரகுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ரகு தனது மனைவி ககனாவின் உடலை கிராமத்திற்கு அருகில் உள்ள யகட்டி கால்வாயில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதற்காக, மீட்பு படையினரை வரவழைத்து கால்வாயில் ககனாவின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ரகு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வீடியோ அழைப்பில் பேசியதும், கொலை வீடியோவை அனுப்பியதும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
