புதுடெல்லி: இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை முறைப்படுத்தும் வகையில், பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா 2026, மக்களவையில் இன்று விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் கடந்த 29-ம் தேதி இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதா இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய பேரணியில் பங்கேற்றவர்கள் மீது டெல்லி காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், இந்த முக்கிய மசோதா மீது விரிவான விவாதம் மேற்கொள்ளப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது துரதிர்ஷ்டவசமானது என்றும், எதிர்காலத்திலாவது மக்கள் எதிர்பார்ப்பதற்கேற்ப பதில்களை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் மசோதாவை நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது வருத்தமளிப்பதாக மக்களவையை நடத்திய பாஜக எம்பி திலீப் சைகியா குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969-ன் கீழ், பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள், பிறப்பு அல்லது இறப்பை உரிய நேரத்தில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், தாமதமாகப் பதிவுகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகளை மேலும் கடுமையாக்கும் நோக்கத்தையும் இந்த திருத்தங்கள் கொண்டுள்ளன. இதன் மூலம், பதிவுகளை முறைப்படுத்தி, துல்லியமான தரவுகளை உறுதிசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து ஓராண்டுக்கு மேலாகவும், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவும் பதிவு செய்யப்படாமல் இருந்தால், பதிவாளரிடம் அளிக்கப்படும் விண்ணப்பம், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக நடுவரின் ஒப்புதலுக்குப் பிறகே பதிவு செய்யப்படும்.
மேலும், ஒரு பிறப்பு அல்லது இறப்பு நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகு பதிவாளரிடம் விண்ணப்பித்தால், அது நீதித்துறை நடுவரின் உத்தரவின் பேரில் மட்டுமே பதிவு செய்யப்படும். இந்த கடுமையான நடைமுறைகள், சரியான நேரத்தில் பதிவுகளை மேற்கொள்வதை உறுதிசெய்யும்.
இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ், ஒரு நபருக்கு சட்டப்பூர்வ அடையாளத்தை அளிக்கிறது. இது கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை போன்ற பல்வேறு தேவைகளுக்கு அவசியமானதாகும். எனவே, இந்த திருத்தங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
