நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தேசியத் தேர்வு முகமை (NTA) நேற்று, மே 3 ஆம் தேதி நடைபெற்ற தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, தேர்வெழுதிய மாணவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 'இது நீட் மோசடி கிடையாது, நீட் தேர்வே ஒரு மோசடி தான்' என்று விமர்சித்ததுடன், உடனடியாக நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் தேர்வு நம்பகத்தன்மை குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் நேற்று மாலை, இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எஸ்எப்ஐ உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, சாஸ்திரி பவனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டன. 'தேர்வு முறை நேர்மையாக இருந்திருந்தால், தேர்வுகளை ரத்து செய்யவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு நிர்பந்திக்கப்பட்டிருக்காது. இது கல்வி அமைச்சகம் மற்றும் தேசிய தேர்வு முகமையின் தோல்வியைத் தெளிவாகக் காட்டுகிறது' என்று காங்கிரஸ் மாணவரணி தலைவர் கூறினார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், தேசிய தேர்வு ஆணையத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.