தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில், கனமழை காரணமாக 4 மாடி கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேற்றிரவு பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பால், கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, சுமார் 8 முதல் 10 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த ஒரு பெண்ணை உயிருடன் மீட்டனர். அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டு, அதனை உடனடியாக காலி செய்யுமாறு பிவாண்டி மாநகராட்சி ஏற்கனவே அங்கு வசித்து வந்தவர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
மாநகராட்சியின் உத்தரவை ஏற்று பெரும்பாலானோர் அந்தக் குடியிருப்புகளை காலி செய்துவிட்ட நிலையில், தரைதளத்தில் சில தொழிலாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. கட்டிடம் மிகவும் ஆபத்தானது என மாநகராட்சியால் பலமுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டு, காலி செய்ய உத்தரவிடப்பட்ட பிறகும், அந்தக் கட்டடத்திற்குள் பழுதுபார்க்கும் பணியை செய்ய அனுமதித்தது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எச்சரிக்கையையும் மீறி செயல்பட்டதன் விளைவாக இந்த துயரம் நிகழ்ந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
