திருச்செந்தூரில் சமுதாய நலக் கூடம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் திமுக அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன், வாக்காளர்களை நோக்கி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். "இந்தக் குருகாட்டூர் பகுதியில் எனக்கு 430-க்கும் மேற்பட்ட வாக்குகள் விழுந்துள்ளது. ஆனால், பாஜகவுக்கு 148 ஓட்டுகளும், த.வெ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளருக்கு 400-க்கும் மேற்பட்ட வாக்குகளும் விழுந்துள்ளது. இது ஏன்? எதற்காக எங்களுக்கு வாக்களிக்கவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக என்னவெல்லாம் செய்தார் என்பதை நினைவுபடுத்திய அனிதா ராதாகிருஷ்ணன், "உங்களுக்காக அனைத்தையும் செய்த முதல்வரை மறந்து விட்டீர்கள். என்னை, நமது கனிமொழி எம்பி-யை மறந்து விட்டீர்கள். எனக்கு விழுந்த வாக்குகளை விடக் குறைவான வாக்குகளே கனிமொழிக்கு விழுந்துள்ளது. என்ன காரணத்திற்காக அவருக்கு இவ்வளவு வாக்குகள் போட்டீர்கள்?" என்று ஆதங்கப்பட்டார்.
மேலும், பாஜகவுக்கு வாக்களித்ததை விட, ஜோசப் விஜய் என்பவர் முழங்கால் போட்டு நடந்ததற்காக அவருக்கு வாக்களித்தீர்களா என்றும் அவர் கேட்டார். "நாங்கள் உங்களை ஏமாற்றி விட்டோமா? இதை நேரில் கேட்பதற்காகவே நான் இங்கு வந்தேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஏழை மக்களுக்கு வாரி வழங்கியதை ஒப்பிட்டுப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "தற்போதுள்ள முதல்வர் விஜய் மக்களுக்காக 100 பைசா கூட தனது சொந்த செலவில் செய்திருப்பாரா? திருமணத்திற்கு ஒரு பவுன் நகையும், பட்டு சேலையும் கொடுப்பேன் என்று கூறினாரே, அதை நிறைவேற்ற முடிந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.
"விசிலுக்கு வாக்கு செலுத்தியதால் தற்போது நீங்கள் அனைவரும் இரவில் முழித்து கொண்டே இருக்கிறீர்கள். ஏன் இந்த விசிலுக்கு வாக்கு போட்டோம் என்று மக்கள் கேட்கிறார்கள். போன முறைதான் எங்களை ஏமாற்றினீர்கள். இனி வரும் தேர்தலில் உங்களது ஆதரவைத் தர வேண்டும். எங்களை இந்தப் பாடு படுத்தினால் என்ன அர்த்தம்? இனிவரும் காலங்களிலாவது எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று அவர் உருக்கமாகப் பேசினார்.
மேலும், 'இன்னும் சில மாதங்களில் தவெக அரசு கவிழ்ந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவார்' என அவர் பேசியுள்ளது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னதாக தவெக அரசை அவதூறாக பேசி கைதான அனிதா ராதாகிருஷ்ணன் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், மீண்டும் அதே போல பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
