நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம், சட்டவிரோதமாக இணையதளத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக கைதான ஒருவருக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் இரண்டாவது முறையாக ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.
ஏப்ரல் 3-ந்தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இது தொடர்பாக, படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்சன்ஸ் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இதில் கைதான ஸ்ரீநாத், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி எஸ். ரம்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி. தேவராஜன், பல கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கசிந்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பு வழக்கறிஞரும் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ஸ்ரீநாத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது ‘ஜனநாயகன்’ பட கசிவு தொடர்பான வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.