ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறை, 'சிறையை உணருங்கள்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், சாதாரண மக்கள் 12 அல்லது 24 மணி நேரம் சிறை வாழ்க்கையை அனுபவிக்க முடியும். சிறைவாசம் எப்படி இருக்கும், சுதந்திரத்தின் மதிப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ளும் வகையில், பார்வையாளர்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறை அறைகளில் தங்கி, சிறை உணவை உண்டு, கைதிகளின் அன்றாட வழக்கங்களைப் பின்பற்றலாம்.
24 மணி நேர 'சிறையை உணருங்கள்' அனுபவத்திற்கு ரூ. 2,000 கட்டணமாகவும், 12 மணி நேர அனுபவத்திற்கு ரூ. 1,000 கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக திறக்கப்பட்ட சிறை அருங்காட்சியகம், நிஜாம் காலத்திலிருந்து தற்கால சீர்திருத்த நடைமுறைகள் வரை சிறைச்சாலைகளின் வளர்ச்சிப் பரிணாமத்தை காட்சிப்படுத்துகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் பழங்கால சங்கிலிகள், சிறை அறைகள், பக்த ராமதாஸ் மற்றும் தசரதி கிருஷ்ணமாச்சார்யுலு போன்ற பிரபலமான கைதிகளின் வாழ்க்கை வரலாறுகள், சிறையில் செய்யப்படும் தொழில்கள், மறுவாழ்வு திட்டங்கள், அத்துடன் நாகார்ஜுன சாகர் அணை கட்டுமானத்தில் கைதிகளின் பங்களிப்பு போன்ற பல தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சஞ்சல்குடா அருங்காட்சியகம், முன்னர் சங்கரெட்டி பாரம்பரிய சிறை அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஒரு நாள் சிறை அனுபவம்' திட்டத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, சஞ்சல்குடாவில் உள்ள மாநில சீர்திருத்த நிர்வாக நிறுவனத்தில் (SICA) இந்த புதிய சிறை அருங்காட்சியகத்தையும், 'சிறையை உணருங்கள்' திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
'இந்த முயற்சி, மாநிலத்தின் சீர்திருத்தங்களில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதோடு, சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு பற்றி பொதுமக்கள் நன்கு புரிந்துகொள்ளவும் உதவும்' என்று சிறைத்துறை டி.ஜி.பி. சௌமியா மிஸ்ரா தெரிவித்தார்.
ஒரு நாள் தானாக முன்வந்து ஒரு கைதியாக வாழும் இந்த புதுமையான யோசனைக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்ததால், இந்த அருங்காட்சியகம் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துவிட்டது.