கர்நாடகாவில், திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகக் கூறி மனைவியை கொடூரமாக கொலை செய்து, அதன் வீடியோவை மனைவியின் பெற்றோருக்கு அனுப்பிய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலாகி தாலுகா, கலகலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவருக்கும், பாக்யஸ்ரீ (23) என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. திருமண வாழ்க்கையில் இருந்தபோதிலும், பாக்யஸ்ரீ தனது சொந்த ஊரான மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த இளைஞருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீனுக்குத் தெரியவந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன.
இதனால் மனமுடைந்த பாக்யஸ்ரீ, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர், பிரவீன் தனது மனைவியிடம் சமாதானம் பேசி, இனி இருவரும் சுமூகமாக வாழ்வதாக உறுதியளித்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அன்று மாலையே தனது மனைவியின் மீது சந்தேகமடைந்த பிரவீன், அவர் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகக் கூறி ஆத்திரத்தில் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேலும், இந்த கொடூர சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த பிரவீன், அதை உடனடியாக பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்யஸ்ரீயின் பெற்றோர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பாக்யஸ்ரீயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கணவர் பிரவீனை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
