மேற்கு ஆசியாவில் தொடரும் போர் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு பாதிக்கப்படாமல் தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் 7 முக்கிய வேண்டுகோள்களை விடுத்துள்ளார். தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைப்பது போன்றவையும் இதில் அடங்கும்.
பிரதமரின் இந்த வேண்டுகோள்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், '1950ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போர்கள், பொருளாதார நெருக்கடிகள் என நாடு பல சவால்களைச் சந்தித்துள்ளது. லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி போன்ற தலைவர்களும் தங்கம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், எந்தவோர் அரசும் குடிமக்களிடம் இதுபோன்ற விரிவான 'ஏழு வேண்டுகோள்களை' முன்வைத்ததில்லை. நாடு முழுவதும் அதிர்ச்சியில் உள்ளது.' என்றார்.
'எனக்கு பிரதமரிடம் மூன்று கோரிக்கைகள் உள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை என்ன, எதிர்காலக் கணிப்புகள் என்ன என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும். இன்று சந்தையில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன, இது பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கைக்கு நல்லதல்ல.'
'தற்போதைய நிலைக்கு மத்தியக் கிழக்கில் நடக்கும் போர்தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எந்தவோர் நாட்டின் அரசும் தன் குடிமக்களுக்கு இதுபோன்ற வேண்டுகோள்களை விடுக்கவில்லை. மற்ற அரசாங்கங்கள் இப்படி வேண்டுகோள் விடுக்காத நிலையில், இதில் வேறு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. நடுத்தர மக்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு சுமைகள்? தியாகம் என்பது அரசிடமிருந்தே முதலில் வந்திருக்க வேண்டும்' என்று அவர் தெரிவித்தார்.