நடிகை சனம் ஷெட்டி பங்கேற்ற நிகழ்ச்சியில், அவர் கையில் இருந்த ஒலிவாங்கி (மைக்) பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செய்தி தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாவது:
மேடையில் பேசிய நடிகை சனம் ஷெட்டி, தன்னை தளபதி விஜய்யின் தீவிர ரசிகை என்றும், 'ஜனநாயகன்' திரைப்படத்தைப் பார்த்த அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார். அவர் மேடையில் இவ்வாறு கூறியபோது, அங்கு கூடியிருந்த கூட்டம் ஆர்ப்பரிக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், மாணவர்களின் நலன் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திரைப்படத்தைப் பற்றி சம்பந்தமே இல்லாமல் பேசியது அங்கிருந்த ஒட்டுமொத்தக் கூட்டத்தினரிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது.
நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்துப் பேச வேண்டிய மேடையில், அங்கு கூடியிருந்த மாணவர்களையும் போராட்டக்காரர்களையும் தேவையின்றி சீண்டும் விதமாக நடிகை சனம் ஷெட்டி பேசியதன் காரணத்தினாலேயே, நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவரிடமிருந்து ஒலிவாங்கியைத் திரும்பப் பெற்றார்கள். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் இடும்பாவனம் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சனம் ஷெட்டி இந்த விவகாரத்தை ஊடகங்களுக்குப் பேட்டியளித்து பூதாகரமாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரைப் பெருமையோடு சமூகத்தில் சொல்லித் திரியும் அந்தப் பெண்மணி, போராட்ட மேடையைப் பயன்படுத்திச் செய்தது மிக மிக மலினமான 'கவன ஈர்ப்பு அரசியல்' என்றும் இடும்பாவனம் கார்த்திக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாணவர்களின் உண்மையான போராட்ட வீரியத்தைக் குலைக்கும் வகையில் செயல்படுபவர்களைப் போராட்டக் களம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என்றும் அவர் தனது பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
