தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நியூ சிவபுரி காலனியைச் சேர்ந்த 28 வயது ஸ்ரீவீணா, அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்த பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் ஸ்ரீவீணாவிற்கும் கடந்த 2023ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களது இல்லற வாழ்க்கையும் நல்லபடியாகவே சென்று கொண்டிருந்தது.
இந்த சூழ்நிலையில், ஸ்ரீவீணா இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தோழியின் திருமண விழா புளோரிடாவில் நடைபெறவிருந்ததால், கணவரின் அனுமதியுடன் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றார்.
அங்கு ஸ்ரீவீணாவை நீண்ட நேரமாகக் காணாததால், அவரது நண்பர்கள் உள்ளிட்டோர் தேடியபோது, நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் அவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டனர். உடனடியாக காவல்துறையினருக்கும், ஸ்ரீவீணாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்ரீவீணாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் இறந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஸ்ரீவீணாவின் பெற்றோர்கள் அங்கு வந்தபோது, தங்கள் மகளுக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்று கூறியதால், அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது.
ஸ்ரீவீணாவின் பெற்றோர்களும், கணவரும் கதறி அழுதனர். ஸ்ரீவீணாவின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல தேவையான ஏற்பாடுகளை உயரதிகாரிகளுடன் பேசி செய்வதாக எல்.பி.நகர் எம்.எல்.ஏ. நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.