தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நியூ சிவபுரி காலனியைச் சேர்ந்த தேவேந்திர ரெட்டி மற்றும் சுனிதா தம்பதியரின் மகள் ஸ்ரீவீணா (28). இவருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவருக்கும் கடந்த 2023-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. கணவன் மனைவி இருவரும் அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் மென்பொருள் என்ஜினீயர்களாக பணிபுரிந்து வந்தனர்.
இந்த சூழலில், தனது தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீவீணா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புளோரிடா சென்றிருந்தார். அங்கு ஒரு நீச்சல் குளத்தில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புப் படையினர், ஸ்ரீவீணாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
தங்கள் மகளுக்கு நீச்சல் நன்கு தெரியும் என்பதால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கண்ணீர்மல்க கதறி அழுதனர். இந்த துயரச் செய்தி அறிந்த எல்.பி.நகர் எம்.எல்.ஏ., உயிரிழந்த ஸ்ரீவீணாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். ஸ்ரீவீணாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உயர் அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.