புதுடெல்லி: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனக் கிளையில் ஊழியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யு) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சூழலில், என்சிடபிள்யு நேற்று வெளியிட்ட அறிக்கையில், பணியிடத்தில் பரவலான பாலியல் துன்புறுத்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துடன் கூடிய ஆழ்ந்த கவலையளிக்கும், நச்சுத்தன்மை வாய்ந்த சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாசிக் டிசிஎஸ் கிளையின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசம் வைத்திருந்ததாகவும், இளம் பெண்களைக் குறிவைத்து அவர்களை பாலியல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்து மத நம்பிக்கைகளைத் தரக்குறைவாகப் பேசியும், பெண்களை மிரட்டியும் துன்புறுத்தியுள்ளனர். பெண் ஊழியர்களை நோக்கித் தொடர்ந்து மதம் சார்ந்த எதிர்மறையான கருத்துகளைக் கூறி ஒரு கட்டாயமான சூழலை உருவாக்கியுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக இளம் ஊழியர்கள் இத்தகைய மத எதிர்ப்புப் பேச்சுகளால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை செயல்படவில்லை என்றும், நாசிக் கிளையில் பாலியல் வன்கொடுமை தடுப்பு (பிஓஎஸ்எச்) நடைமுறைகள் செயலற்று இருந்ததாகவும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. நிறுவனத்தின் இந்தச் செயலற்ற தன்மை வெறும் விதிமீறல் மட்டுமல்லாமல், நிர்வாகக் குறைபாடும் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.