குதிரை பேர விவகாரம் தொடர்பாக, கரூரில் உள்ள ஒரு பைனான்ஸ் அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் வாக்கெடுப்பின்போது, குறிப்பிட்ட வகையில் செயல்பட்டால் ரூபாய் 35 கோடி வழங்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ டாக்டர் என். இளையராஜாவை சென்னையில் தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய திருநாவுக்கரசு என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு எம்.எல்.ஏ மறுப்பு தெரிவித்தபோது, அவருக்கு மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ இளையராஜா புகார் அளித்தார். இதன் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த விவகாரத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிலரின் வாக்குமூலத்தின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த குதிரை பேர சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குதிரை பேரம் தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, கரூர் சின்ன ஆண்டான் கோவில் சாலையில் உள்ள கனகராஜ் என்பவருக்கு சொந்தமான பைபான்ஸ் நிறுவனத்தில் காவல்துறையினர் இரவு முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது இன்று காலை வரை நீடித்தது.
சோதனை நிறைவடைந்த பிறகு, காவல்துறையினர் அந்த பைனான்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். குதிரை பேரம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டதால், அதன் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
