2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், திறமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆளுகை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், விரிவான, துல்லியமான மற்றும் நம்பகமான மக்கள்தொகை, சமூக, பொருளாதார மற்றும் வீட்டுவசதித் தரவுகளை உருவாக்கும் ஒரு முக்கிய தேசியப் பணியாக 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அமையும் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு இந்த முக்கியப் பணியைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். முதல் கட்டமாக, சுயவிவரக் கணக்கெடுப்புப் பணிகள் 17 ஜூலை 2026 முதல் 31 ஜூலை 2026 வரை நடைபெறும். இதைத் தொடர்ந்து, வீட்டுப் பட்டியல் பதிவுகள் 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரை மேற்கொள்ளப்படும்.
இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக, குடிமக்களின் வசதிக்காகப் பாதுகாப்பான இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் சுயவிவரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களின் கணக்கெடுப்புத் தகவல்களை இணையவழியில் எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், இந்த புதிய வசதியை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களின் சுயவிவரக் கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். அறிவிக்கப்பட்ட காலத்திற்குள் நம்பகமான தரவுகளை வழங்குவதன் மூலம், கொள்கை உருவாக்கம், நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டமிடலுக்கு இது பெரிதும் உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கு, ஒவ்வொரு குடும்பமும் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை அளித்து, கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். சுயவிவரக் கணக்கெடுப்பைத் தேர்வு செய்யாத குடும்பங்கள், 1 ஆகஸ்ட் 2026 முதல் 30 ஆகஸ்ட் 2026 வரை நடைபெறும் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பின் போது, கணக்கெடுப்பாளர்களால் தகவல்கள் சேகரிக்கப்படும்.
ஆளுநர் அவர்கள், 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒரு பகிரப்பட்ட தேசியப் பொறுப்பாகக் கருதி, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணியில் ஒவ்வொரு குடிமகனும் முழு மனதுடன் பங்கேற்க வேண்டும் என்று மேலும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களின் செயல்மிகு ஒத்துழைப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதற்கும், மாநில மற்றும் நாட்டின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான தரவுத்தளத்தை வலுப்படுத்துவதற்கும் கணிசமாகப் பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
