மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதிய இத்தேர்வில், 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, தேர்ச்சி பெற்றவர்களில் 58 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 21 ஆம் தேதி நடைபெற்ற இந்த மறுதேர்வு, இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் அமைக்கப்பட்டிருந்த 5,440 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவர்களின் மதிப்பெண் பட்டியலும், அகில இந்திய தரவரிசை விவரங்களும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளின்படி, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா மற்றும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பன்ஷூல் ஆகியோர் 720க்கு 716 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். மேலும், 138 மாணவ, மாணவிகள் 690க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
மொத்த தேர்ச்சி பெற்றவர்களில் 93 சதவீதத்திற்கும் அதிகமானோர் முதன்முறையாக நீட் தேர்வை எழுதியவர்கள் என்றும், அவர்களில் 99 சதவீதம் பேர் 17 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 19 பேர் 700க்கு மேலும், 1,492 பேர் 659க்கு மேலும், 10,160 பேர் 600க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 500க்கு மேல் 90,780 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மாநில வாரியாகப் பார்க்கையில், உத்தர பிரதேசத்தில் இருந்து அதிகபட்சமாக 1.7 லட்சம் பேரும், லட்சத்தீவில் இருந்து மிகக் குறைவாக 43 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவப் படிப்புச் சேர்க்கை மற்றும் கலந்தாய்வுக்கான கால அட்டவணை திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், நீட் தேர்வு முடிவுகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
**தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?**
தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான nta.ac.in/NEET என்பதற்குச் செல்ல வேண்டும். முகப்புப் பக்கத்தில் புதிதாகக் கொடுக்கப்பட்டுள்ள 'NEET UG Re test Result' என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். மாணவரின் விண்ணப்ப எண், பிறந்த தேதி மற்றும் திரையில் தோன்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு 'Submit' என்பதை அழுத்த வேண்டும். அப்போது, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் அகில இந்தியத் தரவரிசை விவரங்களுடன் கூடிய முடிவு திரையில் காண்பிக்கப்படும். இதனைப் பதிவிறக்கம் செய்து, மருத்துவச் சேர்க்கை நடைமுறைகளுக்காகப் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மற்றும் இறுதிப் பட்டியல் வெளியான பின்னரே, மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைமுறைகள் மற்றும் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். எனவே, மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2027) முதல் கணினி முறையில் நீட் தேர்வு, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
