சென்னை: கோவில் நிலங்களை ஒரு இஞ்ச் கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கரூர் இனாம் நில விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், 'கோயில் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை. புதிய ஆட்சி மீது ஊழல் கறையைப் பூச எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் கொடுத்துவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். இனாம் நிலத்திற்கும் கோவில் நிலத்திற்கும் உள்ள வித்தியாசம்கூடத் தெரியாமல் கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்' என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், 'புதிதாகப் பொறுப்பேற்ற சார்பதிவாளர், ஏற்கனவே இருந்த சிக்கல்களை அறியாமல் அந்தப் பத்திரப் பதிவைச் செய்துள்ளார். உடனடியாக அந்தப் பத்திரப் பதிவை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழனி கோவில் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும். பழனி கோவில் நிலத்தைப் பதிவு செய்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு இந்தப் பழனி கோவில் நிலத்தை மீண்டும் கைப்பற்றும். யாருக்கும் நிலத்தைப் பதிவு செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பழனி கோவில் நிலம் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.
கரூர் கோவில் நில விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், 'புதிய ஆட்சி அமைந்த பிறகு அங்குப் பட்டா போட்டுத் தரவில்லை. இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம்தான் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. கரூரில் 3,071 நிலங்களுக்குப் பத்திரப்பதிவு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் கோவில் நிலங்கள் பிளாக்கில் உள்ளன. ஒருபோதும் கோவில் நிலங்களை விட்டுக்கொடுக்க மாட்டோம். கோவில் நிலங்களைப் பாதுகாப்பதில் எங்கள் அரசு எந்தச் சமரசமும் செய்யாது. கோவில் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் எனது உறவினர் பெயரில் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதை நிரூபிக்க முடியுமா?' என்று சவால் விடுத்தார்.
