தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தனியார் பள்ளி கூட்டமைப்பினர் அளித்த பேட்டி ஒன்றில், திமுக ஆட்சியில் 1000 பள்ளிகளிடம் அங்கீகாரத்தை புதுப்பிக்க தலா ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் குற்றம் சாட்டினர். ஆனால், இன்று ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இதை முடித்துவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டது பெரும் புயலைக் கிளப்பியது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தன்னை பற்றி அவதூறாக பேசிய தனியார் பள்ளிக்கூட்டமைப்பின் நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையில், தனியார் பள்ளிகளிடம் அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், திமுக பிரமுகருமான பி.டி. அரசக்குமார் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர் தைரியமாக புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்ததை அடுத்து, பலர் முன்வந்துள்ளனர்.
தற்போது வரை 59 பள்ளிகளிடம் இருந்து ரூ.7.34 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 24 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மோசடி செய்யப்பட்ட பணத்தில் எங்கெல்லாம் சொத்துகள் வாங்கி குவிக்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ஏமாந்த பள்ளிகளின் பட்டியலை தயார் செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
