கிரீஸ் நகரில் இருந்து ஜெர்மனிக்குச் சென்ற ரயான்ஏர் போயிங் விமானத்தில், 20,000 அடி உயரத்தில் பறந்தபோது ஜன்னல் உடைந்ததில் முதியவர் ஒருவர் வெளியே இழுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போயிங் 737-800 ரக விமானம், 230-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஜெர்மனியின் மெம்மிங்கன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களில், சுமார் 20,000 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, அதன் எஞ்சினில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக ஒரு பகுதி உடைந்து சிதறியது. இந்த அதிவேகத்தில் தெறித்த இரும்புத் துண்டு, விமானத்தின் பயணிகள் அமரும் கேபின் ஜன்னலைத் தாக்கி, கண்ணாடி அடியோடு நொறுங்கியது.
ஜன்னல் உடைந்த அடுத்த நொடியே, கேபினுக்குள் இருந்த காற்று அழுத்தம் வேகமாக வெளியேறியதால் பயங்கர வெடிப்புச் சத்தம் ஏற்பட்டது. அந்த ஜன்னல் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த செர்பியா நாட்டைச் சேர்ந்த 61 வயதான முதியவரின் தலை மற்றும் தோள்பட்டை வரை உடல் பகுதி, உடைந்த ஜன்னல் வழியாக வான்வெளியில் வெளியே இழுக்கப்பட்டது.
"திடீரென டயர் வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது, உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க்குகள் கீழே விழுந்தன; திரும்பிப் பார்த்தபோது ஒரு பயணியின் தலை முற்றிலும் விமானத்திற்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது" என்று சக பயணிகள் அந்த திகிலூட்டும் தருணத்தை விவரித்துள்ளனர். அந்த நரக வேளையில், அருகில் அமர்ந்திருந்த அவரது மனைவி துரிதமாகச் செயல்பட்டு, ஜன்னல் வழியே வெளியேறிக்கொண்டிருந்த தனது கணவரின் கால்களைப் பற்றிக் கொண்டு ஆவேசமாகக் கதறினார்.
அதிர்ஷ்டவசமாக, அந்த முதியவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும், அவரது மனைவியின் தைரியமான முயற்சியாலும் அவர் முழுமையாக வெளியே உறிஞ்சப்படுவது தடுக்கப்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த சக பயணிகளும், விமானப் பணியாளர்களும் கடுமையான காற்று வீச்சிற்கு மத்தியிலும் தங்களின் உயிரைப் பணையம் வைத்துப் போராடி, சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு அந்த முதியவரைப் பாதுகாப்பாகப் பிடித்து மீண்டும் கேபினுக்குள் இழுத்தனர்.
இந்தக் கடுமையான விபத்தைத் தொடர்ந்து, விமானத்தின் கேப்டன் உடனடியாக அவசரநிலைப் பிரகடனம் செய்து, விமானத்தை மிக வேகமாகத் தரையிறக்கத் தொடங்கினார். தெசலோனிகி விமான நிலையத்தில் விமானம் அவசரமாகப் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதும், அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட முதியவரை மீட்டனர்.
மைனஸ் டிகிரியில் வீசிய உறைபனி காற்றின் வேகம் காரணமாக அவரது கழுத்து மற்றும் உடலில் கடுமையான உராய்வுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த அதிர்ச்சியூட்டும் கட்டமைப்புத் தோல்வி குறித்து ஐரோப்பிய ஒன்றிய வான்வழிப் பாதுகாப்பு முகமை (EASA) மற்றும் அமெரிக்க எஃப்ஏஏ (FAA) ஆகியவை இணைந்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளன.
