பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு, அவரது சொந்த ஊரான கனியணஹூண்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.
மைசூரில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஜானகி, நேற்று காலமானார். தென்னிந்தியாவின் இசை அரசியாக வலம் வந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 45,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
முன்னதாக, மகாராஜா கல்லூரியில் எஸ்.ஜானகியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் ஊர்வலமாக கனியணஹூண்டி பண்ணை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு, எஸ்.ஜானகியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அரசு மரியாதை நிறைவடைந்த பிறகு, பண்ணை தோட்டத்தில் எஸ்.ஜானகியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
எஸ்.ஜானகி, தனது இசைப் பயணத்தில் 4 தேசிய விருதுகளையும், 33 மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான அங்கீகாரத்தைப் பெற்றவர். தாமதமாக வழங்கப்பட்டதாகக் கூறி, தனக்கு வழங்கப்பட்ட 'பத்ம பூஷன்' விருதை ஏற்க அவர் மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
