தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜயை ஒருமையில் விமர்சித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
'பல வியூகங்கள் வகுத்து நம்மை வீழ்த்தியுள்ளனர். அதனால்தான் நமது தலைவர் தோற்கடிக்கப்பட்டார். நான் 5 நிமிடங்கள் பேசியதை கொத்து பரோட்டாக்கிவிட்டார்கள் என தலைவர் ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றவர் கூறுகிறார். அவர் மாலை 6 மணிக்கு சென்றால் அடுத்த நாள் காலை 10 மணிக்கு தான் எழுந்திருப்பார். அவருக்கு தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. யார் இருக்கிறார், யார் இல்லை என்பதே அவருக்கு தெரியாது. சினிமாவில் நடிப்பது போல் நடிக்க நினைக்கிறார். இந்த வேஷமெல்லாம் எடுபடாது,' என அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார்.
மேலும், 'உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். எந்த இடத்திலாவது தவெக ஜெயிக்கட்டும் பார்க்கலாம். யாரும் ஜெயிக்க முடியாது. இடைத்தேர்தலில் ஸ்டாலின் யாரை ஆதரிக்கிறாரோ அவர் தான் வெற்றி பெறுவார் என்ற வரலாற்றை உருவாக்கப் போகிறோம்,' என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், '1 மாதம் இல்லை 5 வருடங்கள் சிறையில் வைத்தாலும் யாராலும் இந்த இயக்கத்தை அசைத்து பார்க்க முடியாது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. திமுகவை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது. நம்முடைய தலைவருக்கு ஈடாக எந்த தலைவராவது சொல்ல முடியுமா? நம்முடைய இளந்தலைவருக்கு இணையாக ஒரு தலைவராவது சொல்ல முடியுமா? நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பிக்கு ஈடாக எந்த பாராளுமன்ற உறுப்பினர் பணியாற்றுகிறார்? அப்பேற்பட்ட இயக்கத்தை கொண்ட இயக்கம் திமுக,' என பெருமிதம் தெரிவித்தார்.
'மேடையில் நான் பேசியதற்காக என்னை பிடித்தார்கள். என்னை சிறையில் வைத்து விடுவியா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
