தெலுங்கானா மாநிலம் மியாப்பூரில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து புதைத்த பெண், 8 மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்டேஷ் (45) என்பவர் மியாப்பூர் பகுதியில் சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருந்தனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பெண்டேஷ் தனது முதல் மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில், 2014-ல் கணவரை விவாகரத்து செய்த சத்தியவதி (40) என்ற பெண்ணுடன் பெண்டேஷுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக மியாப்பூர் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், நிஜாமாபாத்தை சேர்ந்த மதுசூதன் ரெட்டி (38) என்பவர் பெண்டேஷ் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வந்துள்ளார். அப்போது, சத்தியவதிக்கு மதுசூதன் ரெட்டியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது கள்ளக்காதலுக்கு பெண்டேஷ் தடையாக இருந்ததால், அவரைத் தீர்த்துக் கட்ட இருவரும் திட்டமிட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி இரவு, சத்தியவதி தனது கணவர் பெண்டேஷுக்கு தூக்க மாத்திரை கலந்த உணவை கொடுத்துள்ளார். அதனை உண்ட பெண்டேஷ் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தார். பின்னர், தனது கள்ளக்காதலனான மதுசூதன் ரெட்டியை அழைத்த சத்தியவதி, இருவரும் சேர்ந்து பெண்டேஷின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.
கொலை செய்த பின்னர், பெண்டேஷின் சடலத்தை காரில் எடுத்துக்கொண்டு மராட்டிய மாநிலம் துல்ஜாபூருக்குச் சென்றனர். அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். உடல் பாதி எரிந்த நிலையில் இருந்ததால், அதனை அங்கேயே புதைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர், வீட்டிற்கு திரும்பிய சத்தியவதி, தனது கணவர் பெண்டேஷைக் காணவில்லை என்று மியாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கணவர் காணாமல் போனதாக நாடகமாடிய சத்தியவதியின் முகத்தில் எந்த சோகமும் இல்லை என்றும், அவர் மதுசூதன் ரெட்டியுடன் பல இடங்களுக்குச் சென்று வருவதையும் பெண்டேஷின் உறவினர்கள் கவனித்துள்ளனர்.
இதையடுத்து, பெண்டேஷின் உறவினர்கள் மியாப்பூர் காவல் நிலையத்தில் சத்தியவதி மீது நேரடியாகப் புகார் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கணவரைக் கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெண்டேஷ் கொலை செய்யப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு அவரது மனைவியும் கள்ளக்காதலனும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
