சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதியையும், அமைதியையும் உறுதிசெய்யும் வகையில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களுக்கு இனி அதிகபட்சமாக ரூ.2,500 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணம் செய்யும்போது, சக பயணிகளுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது. குறிப்பாக, அலைபேசியில் உரத்த குரலில் பேசுவது, ஸ்பீக்கர் மோடில் பாடல்கள் அல்லது வீடியோக்களை ஒலிக்கவிடுவது ஆகியவை கடுமையான விதிமீறல்களாகக் கருதப்படும். மேலும், ஹெட்போன் பயன்படுத்தாமல் அலைபேசியில் இசை கேட்பதும், வீடியோக்கள் பார்ப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் பயணிகள், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பயணிகளின் வசதி மற்றும் அமைதியான பயணத்தை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து பயணிகளும் சக பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஹெட்போன்களைப் பயன்படுத்தி அலைபேசியில் பேசுமாறும், உரத்த குரலில் பேசுவதையும், ஸ்பீக்கர் மோடில் எந்தவொரு ஒலியையும் எழுப்புவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு முன்னர், இதுபோன்ற விதிமீறல்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அபராதத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
