நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் 'ஏ' (Adults Only) சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜனநாயகன்' திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது. தற்போது, படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் விஜய், இந்த படத்தில் முதல்வராக நடித்துள்ளார்.
திரைப்படங்களுக்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்படுவதற்கான காரணங்கள் குறித்தும் தணிக்கை வாரியம் விளக்கியுள்ளது. ஒரு திரைப்படத்தில் அதிகப்படியான வன்முறை, ரத்தக் காட்சிகள், ஆபாசமான வசனங்கள், பாலியல் சார்ந்த காட்சிகள் அல்லது சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற உள்ளடக்கம் இருப்பதாக தணிக்கை வாரியம் கருதினால், அதற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்படும்.
'ஏ' சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை, பெற்றோருடன் வந்தாலும் கூட, 18 வயதுக்குக் குறைவானவர்கள் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்கென எந்த விதிவிலக்கும் கிடையாது. திரையரங்கு நிர்வாகத்தினர், பார்வையாளர்களின் வயதை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையைக் கேட்கும் அதிகாரமும் உள்ளது.
மேலும், ஆன்லைன் முன்பதிவு தளங்களிலும் 'Adults Only' என்ற எச்சரிக்கை இடம்பெற வேண்டும் என்றும், இந்த விதிமுறைகளை மீறினால் திரையரங்குகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
'ஜனநாயகன்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டதன் மூலம், படத்தின் வெளியீட்டுத் தேதியை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
