கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதை அரசியல் ரீதியாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கரூர் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்க முடிவு செய்திருப்பதை அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு முடிவாகவே பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு கட்சி சார்ந்த பொதுக்கூட்டத்தில் இதுபோன்ற சாதக பாதகங்கள் குறித்து கேள்வி எழும்போது, விசாரணையின் மூலம் அதற்கான விடைகள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது என்பது இதுவரை நடக்காத ஒரு வேதனையான, சோகமான சம்பவம் என்றும், இதுபோன்ற மிகத் துயர சம்பவங்களை நாம் மனிதாபிமான நோக்கத்தோடு அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இனிவரும் காலங்களில் அரசியல் கட்சிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையும், கோட்பாடுகளையும், பந்தோபஸ்துகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக அரசு மனிதநேய அடிப்படையில் கவனத்தில் கொண்டு, அரசுப் பணி அறிவித்து உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் பார்வை இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) இயக்கத்தின் கருத்தாகும் என்றும் தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் குறிப்பிட்டுள்ளார்.
