தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 839 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, பணிப்பார்வையாளர், இளநிலை வரை தொழில் அலுவலர், சாலை ஆய்வாளர் உள்ளிட்ட மொத்தம் 56 வகையான பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தகுதியான தேர்வர்கள், வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://apply.tnpscexams.in என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு (One Time Registration – OTR) தளத்தில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கனவே ஒருமுறைப் பதிவு செய்திருந்தால், நேரடியாக இத்தேர்விற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
தேர்வு கட்டணத்தை யு.பி.ஐ. (UPI) மூலமாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு (ஓ.எம்.ஆர். அல்லது கணினி வழித் தேர்வு) நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஏதுவாக, விண்ணப்பத் திருத்தச் சாளரம் ஒன்று செயல்படும். இது ஆகஸ்ட் 19, 2026 முதல் ஆகஸ்ட் 21, 2026 வரை மூன்று நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். இந்த குறிப்பிட்ட கால அவகாசத்திற்குப் பிறகு, விண்ணப்பங்களில் எந்தவிதமான மாற்றங்களையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, விண்ணப்பதாரர்கள் கவனத்துடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
