கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்ற கொடூர எண்ணத்துடன், மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (35) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சந்தியா (30) தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் வெளிநாட்டில் இருந்த சமயத்தில், சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வெளிநாட்டில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சந்தியா, தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிரசாந்த் திடீரென சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட பிரசாந்த், அவர் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். உடனடியாக மனைவியை கண்டித்து, கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் சந்தியா தனது கள்ளக்காதலனை சந்திப்பதை நிறுத்தவில்லை. தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக சந்தியா நினைத்துள்ளார். இது குறித்து தனது கள்ளக்காதலன் அனிலிடம் கூறியுள்ளார்.
இருவரும் சேர்ந்து பிரசாந்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனில், அதே பகுதியை சேர்ந்த வெங்கட் சாய் என்பவரின் உதவியை நாடியுள்ளார். திட்டமிட்டபடி, கடந்த 29-ம் தேதி பிரசாந்த் வீட்டில் இருந்தபோது, வெங்கட் சாய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசாந்துக்கு அதிக அளவு மதுவை கொடுத்து அவரை மயக்க நிலைக்கு தள்ளியுள்ளார். சுயநினைவிழந்த பிரசாந்தை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
இதில் பிரசாந்த் படுகாயமடைந்தாலும், அவர் உயிரிழக்கவில்லை. சந்தியாவும், வெங்கட் சாயும் சேர்ந்து அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்ததும், 'உன் கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது' என்று அனில், சந்தியாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து சந்தியா, தனது கணவருக்கு மயக்க ஊசியையும், கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தையும் கலந்து கொடுத்துள்ளார். ஊசி போட்டதும் படுக்கையில் இருந்த பிரசாந்த் துடிதுடிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது சந்தியா, தனது கணவர் என்று கூட பாராமல் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது கணவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக சந்தியா உறவினர்களிடம் அழுது நாடகமாடியுள்ளார். ஆனால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரசாந்த்தின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சந்தியாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 'வெளிநாட்டில் இருந்து வந்த என் கணவர் எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். அடிக்கடி தனிமையில் சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் எங்களுக்கு தொந்தரவாக இருந்து வந்தார். அதனால் எனது கள்ளக்காதலன் அனில் மற்றும் வெங்கட் சாய் ஆகியோருடன் சேர்ந்து என் கணவரை கொலை செய்தேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சந்தியா, அனில், வெங்கட் சாய் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
