ஆவடி அருகே பொத்தூர் பகுதியில் வசிக்கும் சாந்த்குமார் (45), கருப்பசாமி கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2008-ல் கவுசல்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சாந்த்குமார், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். இதன் மூலம் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சாந்த்குமாரின் முதல் மனைவி கவுசல்யா, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், 'எனது கணவருக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு உள்ளது. தற்போது சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை குறி சொல்லி மயக்கி, மூன்றாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனுவின் அடிப்படையில், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
