தமிழக அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில், 'நலம்AI' என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவை இன்று (08.07.2026) முதல் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி வீட்டிலிருந்தபடியே மருத்துவமனைக்கு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசின் மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த 'நலம்AI' வாட்ஸ்அப் சாட்பாட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாண்புமிகு மருத்துவம், மருத்துவ கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் இந்த புதிய சேவையை இன்று தொடங்கி வைத்தார்.
இந்தச் சேவையின் முக்கிய நோக்கம், அரசு மருத்துவமனைகளில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து OP சீட்டு வாங்கும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதாகும். இதன் மூலம், பொதுமக்கள் தங்களின் சுய பதிவு மற்றும் OP முன்பதிவை வீட்டிலிருந்தபடியே எளிதாகச் செய்து கொள்ள முடியும்.
முதல்கட்டமாக, இந்த 'நலம்AI' சேவை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இந்த சோதனை ஓட்டத்தின் வரவேற்பைப் பொறுத்து, விரைவில் இச்சேவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
'நலம்AI' வாட்ஸ்அப் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது?
1. உங்கள் மொபைலில் 96192 22999 என்ற எண்ணை 'நலம்AI' அல்லது அரசு அறிவிப்பு என்ற பெயரில் சேமித்துக் கொள்ளுங்கள்.
2. வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, இந்த எண்ணிற்கு 'Hi' என்று செய்தி அனுப்புங்கள்.
3. உடனடியாக, உங்களுக்குத் தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு காட்டப்படும்.
4. கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்து உங்கள் மருத்துவ நேரத்தை (Appointment) முன்பதிவு செய்யுங்கள்.
மொழியைத் தேர்வு செய்தவுடன், 'NalamAI (TN-NHM)-க்கு வரவேற்கிறோம்! பதிவு, மருத்துவர் மருந்து சீட்டு, பரிசோதனை அறிக்கை, சுகாதார அடையாள அட்டை மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகள் ஆகியவற்றில் நான் உங்களுக்கு உதவ முடியும்' என்ற குறுஞ்செய்தி வரும்.
அதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு உள்நுழைந்தால், உங்களுக்கான OP சீட்டு வாட்ஸ்அப்பிலேயே கிடைத்துவிடும். இந்த புதிய தொழில்நுட்பம், அரசு மருத்துவமனை சேவைகளை அணுகுவதை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
