சென்னையில், ரயில் நிலையத்தில் டிக்கெட் கேட்ட பெண் பரிசோதகரை சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி மாணவி வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த பெண் டிக்கெட் பரிசோதகர்கள், அந்த மாணவியிடம் டிக்கெட் கேட்டபோது, தான் ரயிலில் பயணிக்கவில்லை என்றும், உறவினரை வழியனுப்ப வந்ததாகவும் மாணவி கூறியுள்ளார். இருப்பினும், பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காதது குறித்து பரிசோதகர்கள் மாணவியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, மாணவியை தங்களது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று டிக்கெட் பரிசோதகர்கள் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது, மாணவியின் மொபைல் போனை பரிசோதகர் வாங்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவி, தனது செல்போனை திரும்பக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென மாணவி பெண் டிக்கெட் பரிசோதகரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த தாக்குதலால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான கைகலப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, சம்பவத்தின் போது உடன் இருந்த மற்றொரு டிக்கெட் பரிசோதகரின் உதவியுடன், எழும்பூர் ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில், ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட சட்டக் கல்லூரி மாணவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரயில்வே பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
