தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் தனக்கு திமுக சார்பில் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் விரிவாகப் பேசியுள்ளார்.
'எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தால் சுமார் ரூ.50 கோடி பணம் தருவதாக திமுகவினர் பேரம் பேசினர். மேலும், திமுகவில் இணைந்தால் அமைச்சர் பதவியும் தருவதாகக் கூறினர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர்கள் பெயரில் என்னிடம் பேரம் பேசினர். இந்த பேரத்துக்கு நான் இணங்கவில்லை என்றால் என்ன செய்வோம் என்று தெரியாது என மிரட்டவும் செய்தனர்' என்று விஜி சரவணன் குற்றம்சாட்டினார்.
மேலும், 'பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருமாறு என்னிடம் அக்கட்சியினர் வலியுறுத்தினர். ஸ்ரீவைகுண்டத்தில் எனது வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் இணைந்து சமூக வலைதளங்களில் என் மீது அவதூறுகளைப் பரப்பி வருகின்றன' என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில், தன்னிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்றையும் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ விஜி சரவணன் வெளியிட்டார். இந்த ஆடியோ பதிவு தற்போது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
முன்னதாக, தமாகா சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவுக்கும் இதேபோன்ற பேரம் பேசப்பட்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது விஜி சரவணன் அளித்துள்ள புதிய புகார் தமிழக அரசியலில் மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குதிரை பேர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இதற்கிடையில், அமைச்சரவை கூட்டத்தில் இரண்டு தனிநபர்கள் கலந்துகொண்டது குறித்து ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக சார்பில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரசியல் சூழலில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பேரம் பேசும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
