தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தியாக, இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 18 முதல் 60 வயதுக்குட்பட்ட உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.50,000 மானியம் வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இந்தத் திட்டம் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ், இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
முன்னதாக, இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.06.2026 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் பலர் இந்த மானியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இரு சக்கர வாகனத்திற்கான மானியத் தொகையைப் பெறுவதற்கு, பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி, விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, ஒப்புதல் பெற்ற பின்னரே, பயனாளிகள் இரு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தேவையான அனைத்து ஆவணங்களுடன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 15.07.2026 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தகுதியுள்ள உலமாக்கள் பயனடையுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
