புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் அமைச்சர் மரியவில்சனின் தம்பி மரிய குளோத்தின் வீடு அமைந்துள்ளது. அமைச்சர் மற்றும் அவரது தம்பிக்கு இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி, மரிய குளோத்தின் வீட்டிற்குள் புகுந்து, அவரை மற்றும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு புதுச்சேரி குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத அமைச்சர் மரியவில்சன், அந்த விசாரணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சம்பவத்தை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, அந்த தாக்குதல் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு லாஸ்பேட்டை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையில், ஆர்.கே.நகர் தொகுதியின் தவெக வேட்பாளராக மரியவில்சன் அறிவிக்கப்பட்ட நேரத்தில், உருட்டுக்கட்டையுடன் அவர் தனது தம்பி வீட்டில் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நீதிமன்ற வாய்ந்தாவுக்கு அமைச்சர் மரியவில்சன் ஆஜராகாத நிலையில், அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் ஆஜராகி பெற முதன்மை குற்றவியல் நடுவர் சேரலாதன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று புதுச்சேரி குற்றவியல் நடுவர் மன்றம் எண் 1-ல் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அமைச்சர் மரியவில்சன் இன்று கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் நடைபெறுவதால் அமைச்சர் மரியவில்சன் ஆஜராகவில்லை என்று அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஜூலை 10 ஆம் தேதி அமைச்சர் மரியவில்சன் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார். இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.