விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், பிறந்தநாள் விழாவின் போது சாக்லேட் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவர்கள் 18 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு மாணவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு சக மாணவர்களுக்கு சாக்லேட் வழங்கியுள்ளார். சாக்லேட்டை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே, பல மாணவர்களுக்கு கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. சில மாணவர்கள் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்ததால் பள்ளியில் பதற்றம் நிலவியது.
உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட 18 மாணவர்களையும் செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்களுக்கு 'ஃபுட் பாய்சனிங்' ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். தற்போது அனைத்து மாணவர்களும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து செஞ்சி போலீசார் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாணவர் வழங்கிய சாக்லேட்டுகள் காலாவதியாகி ஒரு வருடம் ஆனது தெரியவந்துள்ளது. காலாவதியான சாக்லேட்டுகள் எப்படி கடைகளில் விற்கப்பட்டன அல்லது அவை போலி சாக்லேட்டுகளா என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் செய்தி பரவியதால், பெற்றோர்கள் பதற்றத்துடன் மருத்துவமனையில் குவிந்தனர்.