அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜூலை 06 முதல் ஜூலை 09 வரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டங்கள், ஜூலை 06-ஆம் தேதி தஞ்சாவூர், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் தொடங்குகிறது. தொடர்ந்து, ஜூலை 07-ஆம் தேதி ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடனும், ஜூலை 08-ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடனும், ஜூலை 09-ஆம் தேதி திருச்சி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளுடனும் நடைபெறவுள்ளது. நாள்தோறும் மூன்று அமர்வுகளாக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படும்.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதிமுகவின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டங்களில் ஆலோசிக்கப்படும். சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அதிமுக தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.