புதினா எண்ணெய்யை நெற்றியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் எந்த நோய் விலகும் என்பது பற்றி இங்கு காண்போம். புதினாவில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதினாவில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சிறிதளவு புதினாவை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் நலத்தை மேம்படுத்தலாம். மேலும், புதினாவிற்கு கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மையும் உண்டு. புதினா இலைகளை மென்று சாப்பிடும்போது, வாயில் உள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தை போக்கி, வாய் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
அஜீரணக் கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு புதினா ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. புதினாவை உணவில் சேர்ப்பது செரிமானத்திற்கு உதவும் என்சைம்களைத் தூண்டி, உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. இதனால் அஜீரணம் குறைகிறது. ஒரு கைப்பிடி புதினா இலைகளை ஒரு கிளாஸ் நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து, அந்த நீரைக் குடித்து வந்தால் அஜீரணம் கட்டுப்படும்.
புதினா, அழற்சியைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதனால், தலைவலி அதிகமாக இருக்கும்போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றியில் தடவி மசாஜ் செய்தால், தலைவலியும் அதனால் ஏற்படும் குமட்டலும் குறையும். மேலும், புதினாவில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம், சுவாச மண்டலத்தில் தீங்கு விளைவிக்கும் கூறுகளைத் தடுத்து, சுவாசக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. இதனால், நுரையீரலில் ஏற்படும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கு புதினா இலைகள் ஒரு சிறந்த தீர்வாக அமைகின்றன.