திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றிய இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள், ஸ்பா உரிமையாளரிடம் இருந்து 20,000 ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில், சி.டி.எச். சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி வரும் பெண் உரிமையாளரிடம், மாதந்தோறும் 50,000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று இரண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மிரட்டியுள்ளனர். இதனிடையே, முதல் கட்டமாக 20,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்றபோது, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடியாகச் செயல்பட்டு, அவர்களைக் காவல் நிலையத்திலேயே கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் உதவி ஆய்வாளர்கள் பாக்கியலட்சுமி மற்றும் அமுல் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கைது நடவடிக்கை, காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்கியதாக பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட சம்பவம், பொதுமக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. நேர்மையான முறையில் பணியாற்றும் காவல்துறையினருக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.