தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) கட்சிப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, 4 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் வகையில், ஏற்கனவே சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த அமைப்பில், மாவட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், திருநெல்வேலி தென்கிழக்கு, திருநெல்வேலி மத்திய, திருநெல்வேலி வடக்கு மாவட்டங்கள் மற்றும் திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம் ஆகியவை அடங்கும். இந்த புதிய மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 5 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த விஜய், கழகத் தோழர்கள் அனைவரும் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். புதிய மாவட்ட நிர்வாகிகளின் முழு விவரங்களை அறிய, வழங்கப்பட்டுள்ள இணைப்பைப் பார்வையிடலாம்.