கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், திமுக அரசுதான் காவல்துறையை ஏவி மக்களைக் கொன்றது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'கரூரில் காவல்துறையை வைத்து திட்டமிட்டு மக்களை கொன்றது திமுக அரசு. எங்கள் தலைவர் மீது கை வைத்ததற்கும், உங்கள் மகன் உதயநிதியின் அரசியல் வாழ்விற்காக எங்கள் மக்களைக் காவல்துறை மூலம் கொன்று குவித்ததற்கும் நிச்சயம் விரைவில் பதிலடி கொடுப்போம்' என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும் அவர் கூறுகையில், 'கரூர் கண்ணீர் பாவத்திற்கு.. கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்றார்.. நீங்கள் விட்ட கண்ணீர் கரூர் மக்களுடையது. நீங்கள் தான் உங்கள் குடும்பத்தில் கடைசி முதல்வர். கரூருக்கு அப்புறம் எங்களின் பரம எதிரி திமுக தான்' என்று கடுமையாக விமர்சித்தார்.
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டதாகவும், மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிக்கப் போகிறார்கள் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் போன்றோர் திமுகவோடு சேரக்கூடாது என்று கூறியபோதும், பழனிசாமி அதை கேட்கவில்லை என்றும், அதனால்தான் அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தைரியமாக தவெகவில் இணைந்தார்கள் என்றும் அவர் கூறினார்.
அதிமுகவில் உள்ள 60% பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டதாகவும், இனி அதிமுக காகித அளவில் தான் இருக்கும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். முதல் இரண்டரை வருடம் இபிஎஸ் முதலமைச்சராகவும், அடுத்து உதயநிதி முதலமைச்சராகவும் வருவார்கள் என்றும் அவர் கணித்தார். இபிஎஸ்-ன் துரோகம், சூழ்ச்சியால் இனி அதிமுகவில் இபிஎஸ்ஸும், அவரது மகனும் மட்டுமே இருப்பார்கள் என்றும், தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவின் சேலையை பேரவையில் வைத்து இழுத்தவர்களுடன் கூட்டணி வைக்க பேசி உள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே இபிஎஸ் மறந்துவிட்டார் என்றும், அந்தந்தத் தொழில் செய்பவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்ய வேண்டும் என்றும், திமுகவால் இருந்த சூழல் இப்போது தவெகவால் இருக்கிறதா என்றும், இந்த மாற்றத்தை திமுகவால் கொடுக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.