தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை பார்களை மூட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை பார்களுக்கான கால அவகாசம் 3 மாதங்கள் நீட்டிக்கப்படுவதாக ஒரு உத்தரவு வெளியிடப்பட்டது. ஆனால், அந்த உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுக்கூட கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள், '2025 டிசம்பர் மாதத்துடன் எங்கள் டெண்டர் முடிந்துவிட்டது. கடந்த ஆட்சியில் 6 மாத அவகாசம் வழங்கப்பட்டது, அது நேற்றுடன் நிறைவடைந்தது. புதிய டெண்டர் விடுவது குறித்து நாங்கள் பலமுறை தலைமைச் செயலகத்தில் கேட்டோம். தவெக அரசாங்கம் பொறுமையாக இருக்கச் சொன்னது. ஆனால், இப்போது மறு அறிவிப்பு வரும் வரை 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்' என்று தெரிவித்தனர்.
மேலும் அவர்கள், 'இன்றுவரை எங்களுக்கு முறையான வாடகை கூட வழங்கப்படவில்லை. எங்கள் கட்டிடங்களை இலவசமாக எடுத்துக்கொண்டு அவர்கள் நடத்துவது போல் உள்ளது. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால், டாஸ்மாக் பார்களுடன் மதுபான கடைகளையும் நாளை முதல் பூட்டிவிடுவோம்' என எச்சரித்தனர்.