மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியிலிருந்து விலக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவரைத் தங்கள் அணியில் இணைத்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) உட்பட மொத்தம் 7 ஐபிஎல் அணிகள் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகளுக்கு இடையே ஹர்திக்கை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இதில் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே ஹர்திக்கை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா கடந்த 2015 முதல் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் மும்பை அணிக்கு கேப்டனாகத் திரும்பினார். ஆனால், அவரது தலைமையின் கீழ் மும்பை அணி கடந்த சீசன்களில் முறையே 10, 3 மற்றும் 9 ஆகிய இடங்களைப் பிடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இதற்கிடையில், 32 வயதான ஹர்திக் பாண்டியா தற்போது தசைநார் காயம் காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில், தனது கிரிக்கெட் பயிற்சியை மேம்படுத்தும் நோக்கில் மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துள்ளார். மும்பையின் லோயர் பரேல் பகுதியில் இருந்து தினமும் பயிற்சிக்குச் செல்வது சிரமமாக இருந்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். பெங்களூரில் உள்ள பிசிசிஐ-யின் நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் புதிய மையமான சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (சிஓஇ) அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள வீரர் என்பதால், காயம் மேலாண்மை முதல் திறன் பயிற்சி வரை அனைத்து வசதிகளையும் அவர் இங்கு இலவசமாகப் பெறலாம். இனிமேல் அவர் ஐபிஎல் மற்றும் தேசியப் போட்டிகளில் விளையாடாத நேரங்களில் அங்கேயே தங்கி தீவிரப் பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதன் மூலம் பிசிசிஐ-யின் சிஓஇ-ஐ தனது நிரந்தரப் பயிற்சி மையமாக மாற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார்.