அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்து வரும் நிலையில், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், பி.தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், தாங்கள் நியமித்த கட்சிப் பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், தாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாகவே செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
கடிதத்தில், 'நீங்கள் உறுதி அளித்தபடி ஏற்கனவே வகித்த பதவிகளில் நியமிக்காமல், தாமதம் செய்ததோடு உங்கள் விருப்பப்படி பொறுப்புகளை நியமித்தீர்கள். தாங்கள் வழங்கியுள்ள கட்சி பதவிகளை ஏற்று, கழகப் பணியில் எங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாத சூழ்நிலையை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள். அந்த பதவிகள் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் என்றும் கழக உறுப்பினர்களாக இருந்து செயல்படுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், 'தேர்தலுக்குப் பின் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஈபிஎஸ் முயன்றார். ஈபிஎஸ் செயலால் 25 MLA-க்கள் தவெக ஆதரவு நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டோம். கடந்த 50 நாட்களில் சாரை சாரையாக அதிமுகவினர் தவெகவுக்கு சென்றுள்ளனர்' என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், அருண்மொழித்தேவன், பாலகிருஷ்ண ரெட்டி, எஸ்.எம்.சுகுமார், வீரமணி ஆகிய 7 MLA-க்களும், கிருஷ்ணமுரளி, தங்கமணி ஆகிய Ex MLA-க்களும் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.
இந்தக் கடிதம் அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சிப் பொறுப்புகளை ஏற்க மறுப்பது, கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. உட்கட்சிப் பிரச்சனைகளை விரைவில் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.