இளையராஜா இசையமைத்த 134 படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, நிரந்தரமான காப்புரிமையை தாங்கள் பெற்றுள்ளதாக சரிகம நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
இளையராஜா இந்தப் பாடல்களை தனது சொந்த பாடல்கள் என கூறி அமேசான் மியூசிக், ஐ-டியூன்ஸ், ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என சரிகம நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது. 1957 காப்புரிமை சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்த தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதை சரிகம தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு, 'முள்ளும் மலரும்', 'ராஜா பார்வை', '16 வயதினிலே', 'நெற்றிக்கண்' உள்ளிட்ட 134 படங்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சரிகம இசை நிறுவனத்திற்கும் இளையராஜாவுக்கும் இடையே நிலவி வரும் இந்த பதிப்புரிமை பிரச்சனையில், சரிகம நிறுவனத்திற்கு சாதகமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதன் மூலம், இந்த 134 படங்களின் இசை உரிம விவகாரத்தில் இளையராஜாவுக்கு தற்போதைக்கு இடைக்கால நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பு இசைத்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.