அதிமுகவில் மாவட்ட நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெறும் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று செங்கல்பட்டு கிழக்கு மற்றும் மேற்கு, வேலூர் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடைபெறும். அதைத் தொடர்ந்து, சனிக்கிழமை அன்று திருவண்ணாமலை வடக்கு, மத்தி, தெற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடனும், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்படும்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும். மேலும், கழகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி K. பழனிசாமி, மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தும் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம், அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.